Saturday, January 7, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி புத்தகங்கள் பிரமுகர்கள்

 சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி: சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பெüத்த மதம் பரவியிருந்த நகரங்கள் மற்றும் பல்வேறு பயணக் குறிப்புகளை சீன மொழியில் எழுதி வைத்திருந்தார். இது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. இது இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "யுவான் சுவாங்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை சி.முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். இதன் ஆங்கில மொழியாக்க நூலை ஏற்கெனவே படித்திருந்தேன். இருப்பினும், தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் இந்த நூலைத் தேர்வு செய்தேன்.  அதேபோல சுந்தர வந்தியதேவன் எழுதியுள்ள "பிரமலை கள்ளர்' என்னும் நூலையும் வாங்கினேன். மதுரை பகுதியில் வாழும் பிரமலை கள்ளர்களின் சமூக, சரித்திர சூழல் பற்றிய நாவல் இது. சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் இந்த 2 நூல்களையும் தேர்வு செய்தேன். இரு நூல்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்: வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ள ஜெயமோகன் எழுதிய "அறம்' என்னும் சிறுகதைகள் தொகுப்பு, தமிழினி பதிப்பகத்தின் "சிலம்பின் காலம்', தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழிசை கட்டுரைத் தொகுப்பு' ஆகியவற்றை வாங்கினேன். தமிழ் இலக்கியம் தொடர்பாக வெளிவரும் புதிய புத்தகங்களை உடனுக்குடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  நவீன இலக்கியம், பழங்கால இலக்கியம் ஆகிய இரண்டிலும் தீவிர ஆர்வம் இருப்பதால் இந்த நூல்களை வாங்கினேன்.  எழுத்தாளரும், முன்னாள் டிஜிபியுமான ஜி.திலகவதி: எனது 3 வயதுப் பேத்தி அதுல்யாவுக்காக பல புத்தகங்களைத் தேர்வு செய்தேன். ஹிட்லர், நெல்சன் மன்டேலா, இந்திரா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட சர்வதேச, தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஓவியப் புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.  எழுத்தாளர் அழகிய பெரியவன்: இந்த முறை மொழிபெயர்ப்பு நூல்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். கூ கி வா தியாங்கோ என்ற ஆப்பிரிக்க எழுத்தாளரின் "பூமிக்குள் ஓடுகிறது நதி', "சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற மொழியபெயர்ப்பு நூல்களை வாங்கினேன். இது தவிர இளம் கவிஞர்கள் சிலரது கவிதை நூல்களையும் வாங்கியுள்ளேன்.

No comments:

Post a Comment